வியாழன், ஜனவரி 17

பூ..காய்..பருத்தி

”நல்லவேளை
பரிமாறும்போதே
பசியாறிவிட்டேன்”

          இத்தனை நாள் ஒழுங்காய்தானே இருந்தான். எங்கிருந்து வந்தது இந்த காதலும், கத்தரிக்காயும். அப்பாவின் கைபிடித்துக்கொண்டுதான் அலைவான். அப்பாதான் அவனுக்கு எல்லாமும்... அவனுக்கு இருக்கும் ஒரே நண்பன் அப்பாதான். இப்போது அவனிடம் கேளுங்கள்.. உன்னுடைய முதல் எதிரி யாரென்று? நிச்சயம் அப்பாதான்.

”எந்த ஒளி பட்டால்
இந்த பூ பூக்கும்”

           அவளுக்கு எல்லாமே அம்மாதான். அம்மா அவளுக்கு தலையில் அழகாக ரெட்டை ஜடை பின்னி, சிவப்பு கலர் ரிப்பன் கட்டி, கனகாம்பரம் பூச்சூடி அழகு பார்ப்பாள். அம்மாதான் உலகம். அம்மாவிற்கு பிடித்த எல்லாமும் இவளுக்கும் பிடிக்கும். இப்போது அவளிடம் கேட்டுப்பாருங்கள். உனக்கு பிடித்தது யாரென்று? நிச்சயம் அம்மா இல்லை.

மண்ணும் கருக்கொண்டது
மழைநீர் புகுந்ததால்!


        அவளின் நினைவுகள் அவனை ஆட்கொண்டது. அவனுடைய சைவ நினைவுகள் அசைவமாக மாறிக்கொண்டிருந்தன. திமிர் பிடித்த கரையானாய் அவன் மனசை அரித்துக்கொண்டிருந்தது. எப்படியாவது கேட்டுவிடவேண்டும். நீ என்னை காதலிக்கிறாயா? கண்ணாடி முன்தான் கேட்டுக்கொள்ள முடிந்தது.
   
”பறந்துவந்த ஒரு
அசைவ விமானம்
கொத்தத்தொடங்கின
அவள் இதயத்தை”

       இவன் எல்லோரையும் போல்தான் சைக்கிள் ஓட்டுகிறான். பிறகு ஏன் இவன் மட்டும் என் மனதில் புகுந்தான். ஒருவேளை பறக்கிறானோ! மனப்பிரமையா? அவளாக மனதில் கேட்டுக்கொண்டாள். இவள் சைக்கிளை உரசியபடி வேகமாகப் பறந்துசெல்வான். திடீரென மனசையும் உரசிச்சென்றுவிட்டான்.

“சத்தியமாக
இயல்பாகத்தான் இருக்கிறேன்
பலதடவை சொல்லிக்கொண்டான்
சொரணையில்லாமல்”

       குளியலறைக்குள் புகுந்துகொண்டால் பச்சைத் தண்ணீர் சுடுதண்ணீர் ஆகும்வரை குளித்தான். தலைமுடியை சீவ ஆரம்பித்தால் சீப்பு நுனி தேயும் வரை சீவிவிட்டு பின்பு முடிகலைத்துதான் செல்வான். சாப்பிட்டுவிட்டு பசிக்குது என்பான். இப்போதெல்லாம் ஆடையில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டான். அவள் உடுத்தும் ஆடையின் நிறத்தில் அள்ளிக்குவித்தான்.
       
“ பால் கொதித்தது
ஆவியானான் அவன்”

        அவளுக்கு ஜன்னல் வீடானது. இப்போதெல்லாம் தலைகீழாகவே படிக்க ஆரம்பித்துவிட்டாள். வெறும் தட்டில் சாப்பிட ஆரம்பித்தாள்.  அடுப்பில் பாலை பொங்கவிட்டு வேடிக்கை பார்த்தாள். கண்கள் நிலைகுத்தி தன்நிலை மறந்தாள். பில்லி சூனியமோ என நினைத்து வீட்டில் பயந்தார்கள். அது  அந்த ஆண்பிள்ளையின் சூனியம்  என அறியாமலேயே!

”பழம் அழகுதான்
வண்டுதான் குடைந்துகொண்டிருந்தது”

இருவரும் மனசைத் தொலைத்து தேடிக்கொண்டிருந்தார்கள். வாழ்க்கை அவர்களை தொலைத்துவிட்டிருந்தது.

“இதயம் வரைந்துகொண்டிருந்தேன்
ஒடிந்தது பென்சிலும்”
 
      இருவருக்கும் மதிப்பெண் குறைந்தது. வீட்டில் காது நிறைந்து வழியும்படி திட்டு விழுந்தது. பள்ளி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, நண்பர்கள் சரியில்லை, நேரம் சரியில்லை, ஊரே சரியில்லை என்று பலவாறு சிந்தித்தனர் அவன் வீட்டாரும், அவள் வீட்டாரும். அவர்களுக்கு யார் சொல்வது? இருவருக்கும் ஹார்மோன் சரியில்லை என்று.

“நான் பார்த்தேன்
புள்ளியாய் நீ
அங்கிருந்து
நீயும் பார்
நானும் புள்ளிதான்”

26 கருத்துகள்:

  1. “ பால் கொதித்தது
    ஆவியானான் அவன்”

    பூ..காய்..பருத்தியாக பழுத்ததோ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கு நன்றி. காய் கனியாகாமல் பருத்தியாக வெடித்துவிட்டது.

      நீக்கு
  2. கள் போன்ற போதையேற்றும் அருமையான சொல்லாடல்'கள் ..!!

    "பழம் அழகுதான்
    வண்டுதான் குடைந்துகொண்டிருந்தது”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அருமையான வாழ்த்துக்கு நன்றி ஆனந்த் ராஜ்.

      நீக்கு
  3. பருவ காலத்தில் வரும் நோய்தான் ஆனால் அழகான உவமானங்களுடன் நல்ல கற்பனை.
    சொல்லாடல்களும் வித்தியாசமானவைகளே.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோய் பருவகாலத்தில் வந்தாலும் அது ஆள்வதும் அவன் அடக்குவதும் அவனவன் கையில்தானே..தங்களின் பாராட்டுக்கு நன்றி இளமதி..

      நீக்கு

  4. வணக்கம்!

    அலையன்று! பொங்கும் சுனாமி! அழகுக்
    கலையென்று போற்றக் கமழும் - வலைப்பூவை
    விச்சு வடித்துள்ளார்! வெல்லும் தமிழ்சுவைத்து
    உச்சி குளிர்ந்தேன் உவந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா மிக்க நன்றி. தங்களின் பாராட்டு கிடைக்க நிச்சயமாய் நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

      நீக்கு
  5. பூ... காய்...பருத்தி....

    அழகாக நெய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. இருவரும் மனசைத் தொலைத்து தேடிக்கொண்டிருந்தார்கள். வாழ்க்கை அவர்களை தொலைத்துவிட்டிருந்தது.

    அழகாக சொன்னீர்கள். பூ ..காய்... பருத்தி.

    பதிலளிநீக்கு
  7. காதல் கனி புள்ளியாக புலம்பவிட்டு இருக்கு .சொல்லாடல் சிந்திக்கும் வண்ணம் சிறப்பாக இருக்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே.

    பதிலளிநீக்கு
  8. இருவருக்கும் மதிப்பெண் குறைந்தது. வீட்டில் காது நிறைந்து வழியும்படி திட்டு விழுந்தது. பள்ளி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, நண்பர்கள் சரியில்லை, நேரம் சரியில்லை, ஊரே சரியில்லை என்று பலவாறு சிந்தித்தனர் அவன் வீட்டாரும், அவள் வீட்டாரும். அவர்களுக்கு யார் சொல்வது? இருவருக்கும் ஹார்மோன் சரியில்லை என்று.

    அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா23 ஜனவரி, 2013

    ரசிச்சு எழுதியிருக்கீங்க...வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  10. சூப்பர் கவிதையும் கருத்தும்.. ரொம்ப நல்லாயிருக்கே விச்சு..

    பதிலளிநீக்கு
  11. //“நான் பார்த்தேன்
    புள்ளியாய் நீ
    அங்கிருந்து
    நீயும் பார்
    நானும் புள்ளிதான்”

    //ஆஹா தத்துவம்... தூரத்துப்பார்வைக்கு புள்ளியாகவும், எல்லாமே அழகாகவும் இருக்கும்.. கிட்ட நெருங்க நெருங்கத்தான் அப் புள்ளியில் இருக்கும் குறை நிறைகளெல்லாம் துலங்க ஆரம்பிக்கும் :) அப்போதான் பிரச்சனைகளும் அதிகமாகும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எளிமையான தத்துவம்தான். தூர இருக்கும்வரை எல்லாமே அழகுதான். நன்றி ஆதிரா..

      நீக்கு
  12. நல்ல நடை விச்சு சார்.நல்ல எழுத்து வீச்சும்,லாவகமும் கை வரப் பெற்றிருக்கிறது.வாழ்த்துக்கள்.இதுதான் இன்றைய நடை முறை யதார்த்தமாக/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமலன் சார் உங்கள் வாழ்த்து எனக்கு மேலும் உற்சாகம் தருகிறது. நன்றி.

      நீக்கு

  13. மண்ணும் கருக்கொண்டது
    மழைநீர் புகுந்ததால்!
    >>
    செம..., நல்லாவே தேறீட்டீங்க சகோ! காதல் வேற வந்துடுத்தா?! இனி கவிதை அருவி போல கொட்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராஜீ.. கவிதை எழுத காதலிக்கனும்னு அவசியமில்லையே!தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  14. பெயரில்லா23 பிப்ரவரி, 2013

    மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு